கோவை, ஆக. 20: தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், கோவை மாநகரில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மழைநீரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க மண்டல அளவிலான அலுவலர்களுக்கு கோவை மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கோவை மாநகராட்சியின் கீழ் கிழக்கு, மேற்கு, மத்திய, தெற்கு மற்றும் வடக்கு என ஐந்து மண்டலங்களில் 100 வார்டுகள் உள்ளன. தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் மாநகர் முழுவதும் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோவை மாநகராட்சி பகுதிகளில் சில இடங்களில் சாலைகள், சாக்கடைகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. இதனால் இந்த இடங்களில் தண்ணீரில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் ஆலோசனை வழங்கியுள்ளது.