டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

கோவை, ஆக. 20:  தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், கோவை மாநகரில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மழைநீரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க மண்டல அளவிலான அலுவலர்களுக்கு கோவை மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கோவை மாநகராட்சியின் கீழ் கிழக்கு, மேற்கு, மத்திய, தெற்கு மற்றும் வடக்கு என ஐந்து மண்டலங்களில் 100 வார்டுகள் உள்ளன. தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் மாநகர் முழுவதும் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோவை மாநகராட்சி பகுதிகளில் சில இடங்களில் சாலைகள், சாக்கடைகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. இதனால் இந்த இடங்களில் தண்ணீரில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் ஆலோசனை வழங்கியுள்ளது.

அதில் மண்டல அளவிலான அலுவலர்கள் சுகாதார துறை அலுவலர்களுடன் இனைந்து மழை காலத்தில் தண்ணீர் தேங்குவதை கண்காணித்து அவற்றில் கொசுக்கள் உற்பத்தியாகுவதை கண்டறிந்து  தடுப்பு மருந்துகள் தெளிப்பது மூலமாக கொசு உற்பத்தியை தடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரி, விடுதிகள், திரையரங்குகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தண்ணீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.இதையடுத்து மழை காலங்களில் தண்ணீர் தேங்கும் இடங்கள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். மேலும் தண்ணீர் தேங்காத வண்ணம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்திரவிட்டுள்ளனர்.

Related Stories: