வாழப்பாடி, ஆக.20: வாழப்பாடி அருகே லாரிகள் மோதிய விபத்தில், ஓசூர் டிரைவர் பலியானார். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். வாழப்பாடி தேசிய நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் சமையலுக்கு பயன்படுத்தும் ஆயில் லோடு ஏற்றி கொண்டு லாரி ஒன்று, சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. புதுப்பாளையம் புறவழிச்சாலையில் லாரியை டிரைவர் திருப்பியுள்ளார். அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு லாரி, ஆயில் லாரி மீது அதிவேகத்தில் மோதியது. இதில் ஆயில் பாக்கெட்டுகள் சாலையில் சிதறின. இந்த விபத்தில், பின்னால் வந்த லாரி டிரைவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் லாரிகளில் வந்த அஜித்குமார் (17), மதன்குமார் (27), ராஜா (28) ஆகிய 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு, வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி தகவலறிந்து வந்த வாழப்பாடி போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர் விசாரணையில், இறந்தவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார்(22) என்பதும், லாரியில் சிமெண்ட் லோடு ஏற்றி கொண்டு சேலம் நோக்கி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து மதன் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.