ஓமலூர் பகுதியில் மழைநீர் பாதுகாப்பு விழிப்புணர்வில் தனியார் பள்ளி மாணவர்கள் ஆர்வம்

ஓமலூர், ஆக.20:ஓமலூர் பகுதியில் மழைநீர் பாதுகாப்பு விழிப்புணர்வில் தனியார் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், நீர் பாதுகாப்பு நிகழ்ச்சிகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மழைநீர் சேமிப்பு மற்றும் தண்ணீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும், மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குனர் சுடலைக்கண்ணன் உத்தரவின்படி, மாணவ-மாணவியர் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் ஒரு லிட்டர் தண்ணீரை சேமிப்பதை ஊக்குவிக்கும் விதமாக, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிகளில் கூட்டம் நடத்துதல், சுவரொட்டி தயாரித்தல், ஓவியம், கவிதை, கட்டுரை, வினாடி-வினா மற்றும் நடனம் என பல்வேறு போட்டிகள் நடத்த வேண்டும்.

தெருக்கூட்டம், விழிப்புணர்வு விவாதம் மற்றும் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். அனைத்து பள்ளிகளிலும், அன்றாட பள்ளி நிகழ்வுகளுடன், நீர் பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலருக்கு மாநில திட்ட இயக்குனர் சுடலைக்கண்ணன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதனைத்தொடர்ந்து, மாணவர்கள் மூலம் ஒவ்வொரு வீடுகளிலும் தண்ணீர் சேமிப்பை ஏற்படுத்த வேண்டும். அதன்மூலம் தண்ணீர் சேமிப்பை மாணவர் இயக்கமாக உருவாக்க அனைத்து பள்ளிகளிலும் நிகழ்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த சுற்றறிக்கை தனியார் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதால், அரசு பள்ளிகளை காட்டிலும், தனியார் பள்ளிகளின் மாணவர்கள் ஆர்வமுடன் செயல்பட்டு வருகின்றனர்.

Related Stories: