ஏற்காடு, ஆக.20: ஏற்காட்டில் உள்ள விநாயகர் கோயிலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்காடு தாலுகாவில் 67 மலைகிராமங்கள் உள்ளன. இருந்தபோதிலும் ஏற்காடு டவுன் பகுதியில் உள்ள இரண்டு விநாயகர் கோயில்களை தவிர, வேறு எங்கும் விநாயகர் கோயில்கள் இல்லாத நிலை காணப்படுகிறது. ஏற்காடு டவுன் பகுதியில் அலங்கார ஏரிக்கு அருகில் ஒரு விநாயகர் கோயிலும், காவல் நிலைய சாலையில் மற்றொரு விநாயகர் கோயிலும் உள்ளது. இதில், காவல் நிலைய சாலையில் உள்ள விநாயகர் கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலில் தினசரி ஏராளமான பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர். இக்கோயில் பழுதடைந்திருந்த நிலையில், புனரமைப்பு பணிகளுக்காக கடந்த 3 ஆண்டுக்கு முன்பு மேற்கூரைகள் மற்றும் பக்கவாட்டு சுவர்களை இடித்தனர். பின்னர், கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர். எனவே, கோயில் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.