சேலம், ஆக.20: சேலம் ஏற்காடு சேர்வராயன் மலை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்1 மற்றும் பிளஸ்2 வகுப்புகளுக்கு தமிழாசிரியர் நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து, மலையாளிகள் பேரவை சார்பில், கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பது:
சேர்வராயன் மலையில் பழங்குடியின மாணவ, மாணவிகள் படிக்கும் பள்ளியில் குடிநீர், கழிவறை வசதி செய்து கொடுக்க வேண்டும். சேர்வராயன் அரசு மேல்நிலைப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தமிழ் ஆசிரியர் 2 ஆண்டுகளாக இல்லை. இதனால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது. எனவே, தமிழ் ஆசிரியரை நியமிக்கவேண்டும். மலைவாழ் மக்கள் அரசு தரிசு நிலத்தில் காலம், காலமாக பூர்வீகமாக விவசாயம் செய்து வரும் நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும். மலைவாழ் மக்களுக்கு எஸ்.டி., மலையாளி சாதிச்சான்று உடனடியாக வழங்க வேண்டும்.