×

போர்வெல் அமைக்க பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினருக்கு மானியம்

நாமக்கல், ஆக.20: நாமக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு போர்வெல் அமைத்து பாசன வசதி பெற மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய போர்வெல் அமைக்க 5சதவீத மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதிய போர்வெல் கிணறு அமைத்து பாசன வசதி ஏற்படுத்திக் கொள்ள, அதிகபட்சம் 1 லட்சம் வங்கிக் கடன் மற்றும் அதற்கு இணையான 50 சதவீத விழுக்காடு அரசு மான்யமான 50 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. இதற்கு சாதி, வருமானம் சான்று மற்றும் இருப்பிடச் சான்றுடன் மேலும் சிறு, குறு விவசாயி என்பதற்கான சான்றினை தாசில்தாரிடமிருந்து பெற வேண்டும். நில உடமைக்கு ஆதாரமாக கணினி வழி பட்டா மற்றும் அடங்கல் ஜெராக்ஸ் இருக்க வேண்டும்.  தகுதியுடைய விவசாயிகள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி, இத்திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் ஆசியாமரியம் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED வையப்பமலையில் பக்தர்கள் கிரிவலம்