×

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஓசூர், ஆக.20: கர்நாடகாவில் மழை பெய்து வருவதால், கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, அணையில் இருந்து 808 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் தென்பெண்ணையாறு நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு, கடந்த ஒரு வாரமாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியாகும். தற்போது அணையின் நீர்மட்டம் 41.49 அடியாக உள்ளது. அணைக்கு நேற்று முன்தினம்  விநாடிக்கு 568 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 808 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி, 3 மதகுகள் வழியாக இந்த நீர் அப்படியே ஆற்றில் திறக்கப்படுகிறது. இதனால் கெலவரப்பள்ளி, தொரப்பள்ளி, அக்ரஹாரம், மோரனப்பள்ளி, பாத்தகோட்டா, ஆழியாளம், கோபசந்திரம் உள்ளிட்ட இடங்களில் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கெலவரப்பள்ளி அணைக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்