காலியாக உள்ள 90 இடங்களை நிரப்புவதற்காக திருச்சி அரசு ஐடிஐயில் கைதிகள் சேர காலக்கெடு நீட்டிக்க முடிவு

வேலூர், ஆக.20: திருச்சி அரசு ஐடிஐயில் காலியாக உள்ள 90 இடங்களை நிரப்புவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க முடிவு செய்யப்பட உள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தண்டனை பெற்று சிறையில் உள்ளோரின் மறுவாழ்வுக்காக பல்வேறு தொழிற்பயிற்சிகளை அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 2015ம் ஆண்டு திருச்சி மத்திய சிறையில் அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மூலம் ஐடிஐ தொடங்கப்பட்டது. இதற்காக நடப்பு கல்வியாண்டில் பிட்டர் 21, கணினி ஆபரேட்டர் 52, எலக்ட்ரீஷியன் 21, டெய்லரிங் 42, வெல்டர் 32 என மொத்தம் 168 கைதிகள் ஐடிஐயில் சேர்த்து கொள்ளப்பட உள்ளனர்.

கடந்த ஆண்டுகளை போல் இந்த ஆண்டும் தமிழக சிறைகளில் உள்ள தகுதியுள்ள கைதிகளை அரசு ஐடிஐக்களில் சேர்த்து கொள்ளலாம் என சிறைத்துறை நிர்வாகம் பரிந்துரை செய்தது. புழல்-1, புழல்-2, மதுரை, வேலூர், சேலம், பாளையங்கோட்டை, கடலூர் உள்ளிட்ட 9 சிறைகளில் தகுதியுடைய மற்றும் ஐடிஐயில் சேர்ந்து பயில விருப்பமுள்ள கைதிகளின் பட்டியலை சேகரித்து ஜூலை மாதத்திற்குள் அனுப்பி வைக்குமாறு சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டது. தற்போது வரை 70க்கும் மேற்பட்ட கைதிகளின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு அவர்களை ஐடிஐயில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. காலியாக உள்ள 90 இடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை சிறையை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, ஐடிஐயில் சேர விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஜூலை மாதத்துடன் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது ஆகஸ்ட் மாதம் இறுதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே மத்திய சிறைகளில் ஐடிஐ பயில தகுதியுள்ள கைதிகளின் விவரங்களை விரைவாக அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் மாத இறுதிக்குள் சேர்க்கையை முடித்து, பயிற்சி வகுப்புகள் தொடங்க திட்டமிடப்பட்டிருப்பதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: