வேலூர், ஆக.20: தமிழகம் முழுவதும் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான அமைச்சுப்பணியாளர் பட்டியலை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மக்களவை தேர்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. தேர்தல் முடிந்து கலந்தாய்வு தொடங்கிய நிலையில் வேலூர் மக்களவை தேர்தல் காரணமாக மீண்டும் அப்பணி முடங்கியது. இந்நிலையில் அடுத்த மாதம் 16ம் தேதி பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் உட்பட பல்வேறு பாடங்களுக்கான 2 ஆயிரத்து 145 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாக தமிழ் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் அதிகளவில் காலியாக உள்ளது. இதனால் 2019-20ம் கல்வி ஆண்டில் பிளஸ்1, பிளஸ்2 தேர்ச்சி வீதம் கடுமையாக சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.