×

வாணியம்பாடியில் தொடர் மழை வீட்டு சுவர் இடிந்து விழுந்து 3 பேர் படுகாயம்

வாணியம்பாடி, ஆக.20: வாணியம்பாடியில் தொடர் மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த தாய் மற்றும் அவரது 2 மகள்கள் படுகாயமடைந்தனர். வேலூர் மாவட்டத்தில் வேலூர் மற்றும் ஆலங்காயம் பகுதிகளில் கன மழை பெய்தது. தொடர்ந்து கடந்த 3 நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வாணியம்பாடி கரிமாபாத் பகுதியை சேர்ந்தவர் தில்சாத்(44). இவரது மகள்கள் ஷமினா(18), ஜமினா(12). இவர்கள் குடும்பத்துடன் நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் படுத்து தூங்கினர். அப்போது, அப்பகுதியில் பெய்த கனமழையால் திடீரென தில்சாத் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.  இதில் கட்டிட இடிபாட்டில் சிக்கிய தில்சாத், ஷமினா, ஜமினா ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு 3 பேரும் மாற்றப்பட்டனர். இதுகுறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணம்...