×

கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஆளவந்தார் அறக்கட்டளை நிலத்தில் செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் வேண்டும்

மாமல்லபுரம், ஆக.20: கிழக்கு கடற்கரை சாலையில்அமைந்துள்ளஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தில் செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து  செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதையொட்டி, இன்று காலை காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்திலும், மதியம் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி  கலையரங்கத்திலும் இதற்கான கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடைபெற உள்ளன. ஏற்கனவே, ஜிஎஸ்டி சாலையில் உள்ள ஆலந்தூர்  வரையும், பழைய மாமல்லபுரம் சாலையில் கந்தன்சாவடி வரையும், கிழக்கு  கடற்கரை சாலையில் கொட்டிவாக்கம் வரையும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் கீழ்  செயல்பட்டு வந்தது. மாவட்டத் தலைநகரம் வெகு தூரத்தில் இருந்ததால்  பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவும், பயன்களை பெறவும் வெகுவாக  சிரமப்பட்டனர். இதையடுத்து ஆலந்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய வட்டங்கள்  சென்னை மாவட்டத்தில் சேர்க்கப்பட்டு, மாநகராட்சி எல்லை விரிவாக்கம்  செய்யப்பட்டது.

தற்போது செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கப்படும்போது  திருப்போரூர், செய்யூர், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு, மதுராந்தகம்  ஆகிய வட்டங்கள் இதில் சேர்க்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், அரசு இறுதி செய்து அறிவிக்கும் வரை இவை எந்த அளவுக்கு உண்மைத்தன்மை  வாய்ந்தவை என்பது தெரியவில்லை. இந்தவேளையில், இன்று நடக்கும் கருத்துக்  கேட்பு கூட்டங்களில் மக்கள் பிரதிநிதிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற  உறுப்பினர்கள், பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்தின் பெரும்பான்மை  அடிப்படையில் மாவட்ட எல்லை வரையறுக்கப்படும் என கூறப்படுகிறது. இதற்கிடையில், செங்கல்பட்டு அடுத்த வெண்பாக்கம் பகுதியில் மாவட்ட கலெக்டர்  அலுவலகம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக சில தகவல்கள் கூறுகின்றன. மாமல்லபுரம் அருகே பட்டிபுலம், சூளேரிக்காடு, நெம்மேலி ஆகிய  இடங்களில் அழகு கொஞ்சும் கிழக்கு கடற்கரை சாலையில் 1600 ஏக்கர் நிலம்  ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமானதாக உள்ளது. இந்த நிலத்தில் சுமார் 40  ஏக்கர் பரப்பளவில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு குத்தகை  அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

மீதி நிலங்கள் எந்த பயன்பாடும் இல்லாமல்  இந்து அறநிலையத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை  நிலத்தில் சுமார் 100 ஏக்கரை அரசு கையக்கப்படுத்தி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை கிழக்கு கடற்கரை சாலையில் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தமிழகத்தின் எந்த மாவட்ட  கலெக்டர் அலுவலகமும் கடற்கரையை ஒட்டி அமையவில்லை. புதிதாக அமைய உள்ள  செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை கிழக்கு கடற்கரை சாலையில்  அமைத்தால், புதுச்சேரி மாநில தலைமை செயலகத்துக்கு அடுத்தபடியாக இந்த கலெக்டர் அலுவலக வளாகம் பெயர் பெறும் வாய்ப்பு உள்ளது.

இங்கு  அமையும்போது இப்பகுதி கிராமங்கள் வளர்ச்சி பெறுவதோடு, சென்னைக்கு  பாதுகாப்பாகவும், விரைவாக செல்வதற்கும் ஏதுவாக அமையும். ஏற்கனவே  ஜிஎஸ்டி சாலையில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ளது. மேலும் ஏராளமான  அரசு அலுவலகங்கள் செங்கல்பட்டு நகர பகுதிக்குள் அமைந்துள்ளன. எனவே,  மக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரை  பகுதியில் அமைக்க வேண்டும். இதன் மூலம் வளர்ச்சி மாவட்டம் மற்றொரு  பகுதிக்கும் விரிவடையும். ஆளவந்தார் அறக்கட்டளை நிலத்தை மக்கள்  பயன்பாட்டுக்கு மாற்றுவதன் மூலம் இந்த நிலம் மக்களுக்கு பயன்பட வேண்டும்  என ஆளவந்தார் எழுதி வைத்த உயில் சாசனத்தின் நோக்கமும் நிறைவேறும்,  மேலும், இதன் மூலம் வருமானம் ஏதுமின்றி உள்ள ஆளவந்தார் அறக்கட்டளைக்கு  கணிசமான வருவாய் கிடைக்கவும் வழி ஏற்படும் என்றனர்.


Tags :
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...