×

பகுஜன் சமாஜ் முடிவு திருநின்றவூர் பெரிய ஏரியை தூர்வார பிச்சை எடுக்கும் போராட்டம்

திருவள்ளூர், ஆக. 20: திருநின்றவூர் பெரிய ஏரியை தூர்வார பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தப்போவதாக  மாவட்ட கலெக்டரிடம் பகுஜன் சமாஜ் கட்சி மனு கொடுத்துள்ளனர்.  திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம், பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவர் அன்புச்செழியன் தலைமையில் அப்பகுதி மக்கள் கொடுத்த மனுவின் விவரம்: திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பெரிய ஏரி தூர்வாரி 70 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. தூர்வாரி கரை அமைக்கவும், கலங்கல் மற்றும்  கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி உள்ளோம். பலமுறை மனுக்களும் கொடுத்து உள்ளோம்.  இந்நிலையில், ஏரியை தூர்வார போதிய நிதியில்லை என பொதுப்பணித் துறையினர் கைவிரித்து விட்டனர். இதே போல், 45 ஆயிரம் வாக்காளர்கள் வசித்து வரும் திருநின்றவூர் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றவும் நிதி இல்லை என கைவிடப்பட்டுள்ளது.

திருநின்றவூர் பெரிய ஏரியை தூர்வாரவும், பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றவும் நாங்கள் பொதுமக்களிடம் பிச்சை எடுத்து நிதியை திரட்டி தருகிறோம். எனவே, மேற்கண்ட இரு கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருமாறு கேட்டுக்கொள்கிறோம். கோரிக்கைகள் நிறைவேற்றாவிடில் வரும் 18.09.2019 அன்று பகுஜன் சமாஜ் கட்சி சார்பில், பொதுமக்களிடம் பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெறும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...