புதுச்சேரி, ஆக. 20: புதுவை வாலிபரை ஓடஓட விரட்டி கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூரியர் ஊழியரை உருளையன்பேட்டை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். புதுவை, கொசப்பாளையம், சாத்தானி வீதியைச் சேர்ந்தவர் குமரேசன் (26). மெடிக்கல்லில் வேலை செய்யும் இவருக்கும், கருணாகரபிள்ளை வீதியில் வசிக்கும் விக்கி என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் குமரேசன் ஓட்டலில் சாப்பிட சென்ற நிலையில் அங்கு விக்கியும் சாப்பிட வந்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்துள்ளனர். இதனிடையே நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் நடந்த கோயில் திருவிழாவுக்கு விக்கி தனது நண்பர்களான சிவா, ஜெயக்குமாருடன் வந்திருந்தார்.
அதுசமயம் அங்கு நண்பர் வீட்டின் எதிரே நின்றிருந்த குமரேசனை, விக்கி தரப்பினர் அசிங்கமாக திட்டி பீர்பாட்டிலால் தலையில் தாக்கியதோடு கத்தியால் குத்த முயன்றனர். இதை குமரேசன் தடுத்த நிலையில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கும்பலிடமிருந்து தப்பிக்க குமரேசன் வெளியே ஓடி நிலையில் 3 பேரும் அவரை சிறிதுதூரம் துரத்திச் சென்றனர். சத்தம் கேட்டு மக்கள் திரண்டதால் அக்கும்பல் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி உருளையன்பேட்டை போலீசில் குமரேசன் முறையிட்டார். இன்ஸ்பெக்டர் சண்முகம் உத்தரவின்பேரில் விக்கி உள்ளிட்ட 3 பேர் மீது ஜாமீனில் வெளியே வரமுடியாத பிரிவுகளில் வழக்குபதிந்த போலீசார் கொசப்பாளையம் கூரியர் ஊழியரான சிவா என்ற சிவசங்கரை (23) கைது செய்தனர். தலைமறைவான விக்கி உள்ளிட்ட 2 பேரையும் தனிப்படை வலைவீசி தேடி வருகிறது.