வி.சிறுத்தைகள் சாலை மறியல்

சின்னசேலம், ஆக. 20: சின்னசேலத்தில் பேனர் அகற்றப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சின்னசேலம் பஸ்நிலைய பகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து பேனர் வைத்திருந்தனர். இந்நிலையில் காவல்துறை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பேனர்களை அகற்ற போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

இதைடுத்து சின்னசேலம் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் மற்றும் போலீசார் சின்னசேலம் பஸ்நிலைய பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் குபேந்திரன், பழனிச்சாமி, சக்திவேல் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் நேற்று காலை பஸ்நிலையத்தில் அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் விஜயகுமார், தனிப்பிரிவு எஸ்ஐ அன்பழகன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories: