திருக்கோவிலூர், ஆக. 20: திருக்கோவிலூர் பகுதியில் மினிலாரியில் ஆட்களை ஏற்றி வந்த டிரைவருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.திருச்சி அருகே நேற்று முன்தினம் ஆட்களை ஏற்றி வந்த மினிலாரி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து, பலர் பலியான சம்பவம் நெஞ்சை உலுக்கியது. இந்நிலையில் திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் சக்திவேல் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மினிலாரியில் திருவண்ணாமலை மாவட்டம் ஆவூர் கிராமத்தை சேர்ந்த நாகூர்மீரான் மகன் இர்பான் (22) என்பவர் ஆட்களை ஏற்றி வந்தார். இதையடுத்து அந்த மினிலாரியை மடக்கி பிடித்த போலீசார் டிரைவருக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்தனர். மேலும் அதில் பயணித்த பொதுமக்களை வண்டியில் இருந்து கீழே இறக்கி நேற்று முன்தினம் நடந்த விபத்தை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.