கூட்டுக்குடிநீர் திட்ட ஒப்பந்த பணிகளில் முறைகேடு

விழுப்புரம், ஆக. 20: விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை ஒப்பந்தம் விடுவதில் நடந்த முறைகேடுகளை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் பகுதியில் 7 பம்பிங் பராமரிப்பு பணிகளுக்கு (ரூ.1.50 கோடி) விழுப்புரம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் மூலம் ஒப்பந்தம் விடப்பட்டது. நேற்று மாலை வரை ஒப்பந்தத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்துடன் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டது. செஞ்சி-அனந்தபுரம், ஆலம்பாக்கம், ஒட்டப்பட்டு, முடியனூர், கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்படும் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதில் பங்கேற்பதற்காக நேற்று காலையில் இருந்து ஒப்பந்ததாரர்கள் விழுப்புரத்தில் உள்ள உதவி நிர்வாகபொறியாளர் அலுவலகத்திற்கு விண்ணப்பத்துடன் வந்தனர்.

அப்போது காணையைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் தேவநாதன் தன்னை அதிகாரிகள் ஒப்பந்தத்தில் பங்கேற்கவிடவில்லை என்று கூறி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இது குறித்து ஒப்பந்ததாரர் தேவநாதன் கூறுகையில், குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தப்பணிகள் ஆளுங்கட்சியினருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் பணிகளை தரமாக செய்யாமலும், முறைகேட்டிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தட்டிக்கேட்டதாலும், வெளியே சொன்னதாலும் என்னை இந்த ஒப்பந்தத்தில் பங்கேற்க விடாமல் செய்ததுடன், எனது மனுவையும் அதிகாரிகள் பெறவில்லை என்றார்.

Related Stories: