×

வீடுகளை அகற்ற கடும் எதிர்ப்பு பேச்சிப்பாறை சீரோபாயின்ட்டில் அனைத்து கட்சி சாலை மறியல் வசந்தகுமார் எம்பி, 5எம்எல்ஏக்கள் பங்கேற்பு

அருமனை, ஆக.20: பேச்சிப்பாறை சீரோபாயின்ட்டில் வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 அரச பஸ்களை அவர்கள் சிறை பிடித்தனர். இதில் எம்.பி மற்றும் 5 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.பேச்சிப்பாறை சீரோபாயின்ட் பகுதியில் கடந்த 60 ஆண்டுகளாக சுமார் 50க்கும் மேற்பட்டோர் வீடுகள் கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் உலக வங்கி நிதி உதவியுடன் பேச்சிப்பாறை அணையில் சாய்வணை கட்டும்பணி மற்றும் பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதியும், இந்த பகுதியில் அணையின் கீழ்பகுதியில் அரசு நிலத்தில் உள்ள வீடுகளை அகற்றுவதற்கு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனையடுத்து அங்கு குடியிருக்கும் மக்கள் வேறு வீடுகட்டுவதற்கு தங்களுக்கு போதிய நிதி வசதி கிடையாது. எனவே எங்களை இங்கிருந்து அப்புறப்படுத்த கூடாது என வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு சில வீடுகளும் அதை சுற்றி உள்ள பகுதிகளும் இடிக்கப்பட்டது. இதற்கு அங்கு குடியிருக்கும் மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து பேச்சிப்பாறை சமத்துவபுரத்தின் பின்பகுதியில் இந்த பகுதி மக்களுக்கு இடம் வழங்கலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த பகுதி குடியிருப்பதற்கு ஏற்ற இடம் இல்லை. எனவே சீரோ பாயின்ட் பகுதி அருகே புறம்போக்கு நிலம் உள்ளது. அதை கையகப்படுத்தி, வீடுகட்டுவதற்கான நிதிஉதவியும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், மாற்று ஏற்பாடு செய்யும் வரை இந்த வீடுகளை இடிக்க கூடாது என வலியுறுத்தியும் நேற்று அனைத்து கட்சி சார்பில் பேச்சிப்பாறை சீரோ பாயின்ட் பகுதியில் சாலைமறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மேல்புறம் ஒன்றிய திமுக செயலாளர் சிற்றார் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சத்தியராஜ், பெஞ்சமின், முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் சேகர், ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வசந்தகுமார் எம்பி, எம்எல்ஏக்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், பிரின்ஸ், ராஜேஷ்குமார், மனோதங்கராஜ் ஆகிேயார் போராட்டத்தை விளக்கி பேசினர். இதில் முன்னாள் அமைச்சர் லாரன்ஸ், உண்ணாமலைக்கடை முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜெயசீலன், குமரி மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ததேயு பிரேம்குமார், கடையல் பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் மனோகரன் மற்றும் பொதுமக்கள், மாவட்ட ஐஎன்டியுசி தலைவர் அனந்தகிருஷ்ணன், மேல்புறம் வட்டார காங்கிரஸ் தலைவர் மோகன்தாஸ், மேல்புறம் ஒன்றிய பா.ஜ துணைத்தலைவர் மனோகரன், மாவட்ட திமுக பொருளாளர் ஜாண்பிரைட் உட்பட அனைத்து கட்சியை சேர்ந்தவர்கள், பொதுமக்கள்  கலந்து கொண்டனர். மறியலின் போது அந்த வழியாக வந்த 2 அரசு பஸ்களை பொது மக்கள் சிறைபிடித்தனர். இதனையடுத்து ஏனைய பஸ்கள் திருப்பி விடப்பட்டன.போராட்டத்தின் போது நடுரோட்டில் கஞ்சி காய்ச்சினர். இதனால் சிற்றார் சிேலான்காலனி, குற்றியார், கோதையார் உள்ளிட்ட பகுதிகளுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.விளவங்கோடு தாசில்தார் புரந்தரதாஸ், தக்கலை டிஎஸ்பி கார்த்திகேயன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உயர் அதிகாரிகள் சம்பவ இடம் வரவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினார். போராட்டக்காரர்கள் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசும்போது அவர்கள் உரிய தீர்வு காண்பதாக உறுதி அளித்திருப்பதாக தாசில்தார் கூறினார். இதனையடுத்து  10மணிக்கு தொடங்கிய போராட்டம் இரண்டரை மணிக்கு கைவிடப்பட்டது. சுமார் 5 மணி நேரம் நடந்த இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED ‘வைப்புநிதி உங்கள் அருகில்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி