திருச்சி மாவட்ட 16 ஒன்றியங்களில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு இலவச மருத்துவ முகாம் 26 முதல் செப்.14 வரை நடக்கிறது

திருச்சி, ஆக.14: மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மாவட்ட அளவிலான மருத்துவ முகாம் அந்தந்த ஒன்றியங்களில் நடைபெற உள்ளது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (சமக்ரா சிக்ஷா) சார்பில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் அனைத்து வட்டார வளமைங்களிலும் ஆகஸ்ட் 26ம் தேதி முதல் செப்டம்பர் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு உள்ளடக்கிய கல்வி அளிப்பதில் உடல் மற்றும் மனதளவில் எவ்வித தடையும் இருக்கக்கூடாது என்பதற்காக இந்த முகாம் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. பிறந்த குழந்தை முதல் 18 வயதுடைய அனைத்து மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளும் கலந்து கொள்ளலாம். பங்கேற்கும் குழந்தைகளின் தேவையை பொறுத்து தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள், அறுவை சிகிச்சை ஆலோசனைகள், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை, யுடிஐடி அட்டை பதிவு செய்தல் போன்றவை இலவசமாக அளிக்கப்படும். தேசிய அடையாள அட்டை பெற விரும்புவோர் குழந்தையின் புகைப்படம், ரேஷன் கார்டு, பிறப்பு சான்று, ஆதார் அட்டை கொண்டு வரவேண்டும். உதவி உபகரணங்கள் பெற தேவையுள்ளோர் பெற்றோரின் வருமானச் சான்றிதழ், காப்பீடு அட்டை முதலியன கொண்டு வரவேண்டும். பயணப்படியும், உணவுப்படியும் வழங்கப்படும்.

எனவே பெற்றோர்கள் பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுயஉதவி குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் முகாமில் எந்த குழந்தைகளும் விடுபடாத வண்ணம் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். ஆக.26ம் தேதி திருச்சி நகர ஒன்றியத்துக்கு உறையூர், எஸ்.எம். பள்ளியிலும், 27ம் தேதி லால்குடி அரசு ஆண்கள் பள்ளியிலும், 28ம் தேதி திருவெறும்பூர் அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 29ம்தேதி மருங்காபுரிக்கு கோவில்பட்டி அரசு பள்ளியிலும், 30ம் தேதி அந்தல்லூருக்கு முத்தரசநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், 31ம் தேதி மணிகண்டத்துக்கு சோரசம்பேட்டை அரசு பள்ளியிலும், செப். 3ம் தேதி மணப்பாறைக்கு மணப்பாறை அரசு பெண்கள் பள்ளியிலும், 4ம் தேதி மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் பள்ளியிலும், 5ம் தேதி தொட்டியத்துக்கு பாலசமுத்திரம் அரசு பள்ளியிலும், 6ம் தேதி துறையூர் அரசு பெண்கள் பள்ளியிலும், 7ம் தேதி உப்பிலியபுரம் அரசு பள்ளியிலும், 9ம் தேதி புள்ளம்பாடி அரசு பள்ளியிலும், 11ம் தேதி திருச்சி மேற்குக்கு கன்டோன்மென்ட் ஆர்.சி.பள்ளியிலும், 12ம் தேதி முசிறிக்கு முசிறி அரசு ஆண்கள் பள்ளியிலும், 13ம் தேதி வையம்பட்டி அண்ணா அரசு பள்ளியிலும், 14ம் தேதி தா.பேட்டை அரசு பெண்கள் பள்ளியிலும் முகாம் நடைபெற உள்ளது என திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Related Stories: