திருச்சி, ஆக.14: சுதந்திர தினத்தையொட்டி திருச்சியில் பாதுகாப்பு பணியில் 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 73வது சுதந்திர தினவிழா நாளை(ஆக.15ம்தேதி) நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் பிரதமர் மற்றும் அந்தந்த மாநிலங்களில் முதல்வர்கள் சுதந்திர கொடியேற்றி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்குவது வழக்கம். அதுபோல் ஒவ்வொரு மாவட்டங்களிலும் கலெக்டர் தலைமையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவர் நடனம் உள்ளிட்டவைகள் நடத்தப்படும். தற்போது காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சமீபத்தில் ரத்து செய்யப்பட்டதன் தாக்கம் சுதந்திர தினவிழாவில் எதிரொலிக்கும் என்ற எச்சரிக்கையை அடுத்து அனைத்து மாநிலம் மற்றும் மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் வரும் கோயில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோல் திருச்சியில் விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், கோயில்கள், சர்ச், மசூதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.