சிவகாசி, ஆக. 14: கோர்ட்டில் சாட்சி சொன்னவரை அரிவாள் வெட்டிய 2 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிவகாசி கோர்ட் நேற்று தீர்ப்பு வழங்கியது. சிவகாசி அருகே கீழத்திருத்தங்கல் திருவள்ளுவர் காலனியை சேர்ந்தவர் வடிவு(40). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குழந்தைராஜ்(52), ஜெயராஜ்(52) ஆகியோருக்கும் நீண்ட நாட்களாக நிலப்பிரச்னை இருந்துள்ளது. இது தொடர்பாக சிவகாசி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் வடிவுக்கு ஆதரவாக வடிவின் சகோதரர் ஈசாக்(48) கோர்டில் சாட்சி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குழந்தைராஜ், ஜெயராஜ் இருவரும் கடந்த 7.4.2012ம் ஆண்டு ஈசாக்கை அரிவாளால் வெட்டினர்.
இது குறித்து ஈசாக் மனைவி செல்லத்தாய் கொடுத்த புகாரின் பேரில் குழந்தைராஜ், ஜெயராஜ் இருவர் மீதும் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். சம்பவம் குறித்து சிவகாசி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. அரசு வழக்கறிஞர் ஆனந்தகுமார் வாதாடினார். குற்றவாளிகள் குழந்தைராஜ், ஜெயராஜ் இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி பிலிப்நிக்கோலக் அலேக் தீர்ப்பு வழங்கினார்.