×

சாயல்குடி அருகே பூட்டியே கிடக்கும் கால்நடை மருத்துவமனை

சாயல்குடி, ஆக. 14:  சாயல்குடி அருகே உச்சிநத்தத்தில் அரசு கால்நடை மருத்துவமனை பூட்டியே கிடப்பதால், கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். சாயல்குடி அருகே உச்சிநத்தம் அரசு கால்நடை மருத்துவமனையில் உச்சிநத்தம், முத்துராமலிங்கபுரம், வி.சேதுராஜபுரம், கொண்டுநல்லான்பட்டி, கொக்கசரன்கோட்டை உள்ளிட்ட சுற்றிருக்கும் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், வளர்க்கும் மாடு, ஆடு, கோழி மற்றும் நாய் போன்றவைக்கு சிகிச்சை அளித்தும், தடுப்பூசிகள், மாத்திரை, மருந்துகளை வாங்கி கால்நடைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். இங்கு நிரந்தர மருத்துவர் இல்லாததால், மருத்துவர் இன்றி மருத்துவமனை பூட்டியே கிடப்பதாக அப்பகுதி விவசாயிகள் புகார் கூறுகின்றனர். இதனால் மாடுகளுக்கு செயற்கை கருவூட்டல் மற்றும் பிரசவகால பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிப்பது கிடையாது. கிடாய் ஆடுகளுக்கு குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்வதும் கிடையாது. மேலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஆடு, கோழிகள் மர்ம நோய்கள் தாக்கப்பட்டு வருகிறது. அவைகளுக்கு உரிய சிகிச்சை மற்றும் தடுப்பூசிகள் இல்லாததால் இறந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து உச்சிநத்தம் கிராமத்தினர் கூறுகையில், உச்சிநத்தம் கால்நடை மருத்துவமனை 2016ல் திறக்கப்பட்டது. அன்று முதல் மருத்துவமனையில் நிரந்தரமாக மருத்துவர் இல்லாததால், மருத்துவமனை பூட்டியே கிடக்கிறது, ராமநாதபுரம் மாவட்டத்தின் கடைசி எல்லையில் கிராமம் அமைந்துள்ளதாலும், அருகில் வேறு மருத்துவமனைகள் இல்லாததாலும், கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சை பெறமுடியவில்லை. வாரம் பிரதி சனிக்கிழமைகளில் கோழிகளுக்கு தடுப்பூசி போடப்படும், மருத்துவர் இல்லாததால், உதவியாளர் கூட திறப்பது கிடையாது.

மேலும் விபத்து மற்றும் திடீர் மர்ம நோய் தாக்கப்பட்டு இறக்கும் தருவாயில் இருக்கும் கால்நடைகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்க முடியாமல் இறந்து விடுகிறது. கிடாய்ஆடுகளுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ய முடியவில்லை. பெரும்பாலும் மருத்துவமனை பூட்டியே கிடப்பதால் கருவேல மரம் அடர்ந்து வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் சமூக விரோதிகள் சீட்டு விளையாடுவது, மது அருந்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதும், கட்டிடத்தின் பொருட்களை சேதப்படுத்தியும் சென்று விடுகின்றனர். இதனால் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. எனவே கால்நடை மருத்துவமனையில் நிரந்தர மருத்துவர் மற்றும் உதவியாளர்களை நியமிக்க வேண்டும். பூட்டி கிடக்கும் கால்நடை மருத்துவமனையை திறக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை