ஒட்டன்சத்திரம், ஆக. 14: பல ஆண்டாக ஊரக திறனாய்வு தேர்வு உதவித்தொகை உயர்த்தப்படாததால் மாணவர்களின் பங்கேற்கும் ஆர்வம் குறைந்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் கிராமப்புற அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கடந்த 1991ம் ஆண்டு முதல் ஊறக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் பங்கேற்பர். ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 100 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்களுக்கு 12ம் வகுப்பு வரை கல்வி உதவித்தொகையாக ஆண்டுக்கு ரூ.1000 வழங்கப்படும். இத்திட்டம் துவங்கப்பட்டு 29 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. துவங்கப்பட்ட ஆண்டான 1991ல் வழங்கப்பட்ட ரூ.1000 என்பது மாணவர்களின் கல்விக்கு மட்டுமின்றி குடும்பத்திற்கும் உபயோகமாக இருந்தது. இத்தேர்வில் பங்கேற்க குடும்ப ஆண்டு வருமானம் ரூ.12,000 ஆக இருந்தது. தற்போது ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் உதவித்தொகை மட்டும் அதே ஆயிரமாகத்தான் உள்ளது. இதனால் மாணவர்கள் பங்கேற்க ஆர்வமின்றி உள்ளனர்.
இதுகுறித்து சமூகஆர்வலர்கள் கூறுகையில், ‘திறனாய்வு தேர்வு உதவித்தொகையை அதிகரித்தால் கிராமப்புற மாணவர்களை ஊக்கப்படுத்துவதுடன் போட்டி தேர்வுக்கு தயாராகும் ஆர்வமும் அதிகரிக்கும். மேலும் உதவித்தொகை பெறும் மாணவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சென்று காசோலையாக பெற்று வருகின்றனர். இந்த நடைமுறையை மாற்றி மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தினால் மாணவர்களின் வீண் அலைச்சலும், நேர விரையமும் தவிர்க்கப்படும்’ என்றனர்.