நாமக்கல், ஆக.14: சுகாதாரத் துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. நாமக்கல்லில், பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவ பேரவைக் கூட்டம் நடந்தது. மாநிலத் தலைவர் கங்காதரன் தலைமை வகித்து பேசினார். சுகாதாரத் துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும். பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்களுக்கு மேற்பார்வையாளர் பதவி உயர்வு வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. மேலும், ஒருங்கிணைக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர்களின் பணிமூப்பு, பதவி உயர்வு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பணியில் மூத்த அலுவலர்களுக்கு பாதிப்பில்லாமல் பணப்பலன்களை அளித்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், முன்னாள் மாநில துணைத்தலைவர் சோனாச்சலம், மாநில பொதுச்செயலாளர் லட்சுமிநாராயணன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.