திருப்பத்தூர், ஆக.14: திருப்பத்தூர் அருகே அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் அருகே உடையா முத்து ஊராட்சியில் மாங்குப்பம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கோயிலுக்கு சொந்தமான 72 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அப்பகுதி மக்கள் கோயில் கட்டியும், பஸ் திரும்பும் இடமாகவும், கரக பூஜை செய்யும் இடமாகவும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பழனி என்பவர் 16 சென்ட் நிலத்தை முள்வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த அப்பகுதி மக்கள் பழனியிடம் தட்டிக் கேட்டதுடன், இதுகுறித்து திருப்பத்தூர் தாசில்தாரிடம் புகார் செய்தனர். பின்னர், போலீசார் முன்னிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சர்வேயர் மூலம் நிலம் அளவீடு செய்தனர். அதில், அந்த நிலம் கிராம நத்தம் புறம்போக்கு என்பது தெரியவந்தது. இதற்கிடையில், அந்த 16 சென்ட் நிலத்திற்கு தனக்கு பட்டா வழங்குமாறு பழனி, திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். அதன் அடிப்படையில் வருவாய்த் துறையினர் ஆய்வு மேற்கொண்டு, பழனிக்கு பட்டா வழங்குவதாக தகவல் வெளியானது.