வீடுகளில் திருட்டு 2 பேர் கைது

உடுமலை, ஆக. 14: உடுமலை மாரியப்பா லேஅவுட்டை சேர்ந்தவர் புவனேந்திரன்(32), விவசாயி. இவர் கடந்த மார்ச் மாதம் வெளியூர் சென்றிருந்தபோது, மர்ம நபர்கள் இவரது வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடி சென்றனர். அதேபோல் உடுமலை அன்சாரி வீதியை சேர்ந்தவர் ரவீந்திரன்(60). ஓய்வு பெற்ற மில் தொழிலாளி வீட்டில் இருந்த நகைகள் திருட்டு போனது. உடுமலை சிவலிங்கம் பிள்ளை லேஅவுட்டை சேர்ந்தவர் தாமோதரன்(54) என்பவர் கடந்த 5ம் தேதி வெளியூர் சென்றிருந்தபோது, அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த நபர்கள் நகைகளை திருடிச்சென்றனர். இதன்படி 3 வீடுகளிலும் மொத்தம் 32 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக மாவட்ட எஸ்பி., கயல்விழி உத்தரவின்பேரில், டிஎஸ்பி., ஜெயச்சந்திரன் போலீசார் அடங்கிய தனிப்படையினர் கொள்ளையர்களை தேடி வந்தனர். நேற்றுமுன்தினம் தாராபுரம் சாலையில் சந்தேகப்படும்படி நின்ற 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர்கள் குமாரபாளையம் வெப்பம்படையை சேர்ந்த சுரேஷ்(30), தென்காசியை சேர்ந்த கருவாடு மாரியப்பன்(30) என்பதும், இருவரும் உடுமலையில் 3 வீடுகளிலும் நகை திருடியதும் தெரியவந்தது. 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 32 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

Related Stories: