காட்டாற்று வெள்ளத்தில் மாயமான இரண்டு வயது குழந்தை உடல் மீட்பு

பொள்ளாச்சி, ஆக.14: பொள்ளாச்சியை  அடுத்த சர்க்கார்பதியில், காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி மாயமான இரண்டு வயது  குழந்தை 5 நாட்களுக்கு பிறகு பிணமாக மீட்கப்பட்டது. பொள்ளாச்சியை அடுத்த  சர்க்கார்பதியில், கடந்த 8ம் தேதி இரவு பெய்த கனமழை காரணமாக நாகரூத்து பகுதியில் மலைவாழ் மக்கள் வசித்த  குடிசைகள் அடித்து செல்லப்பட்டது.இதில் குஞ்சப்பன்  என்பவரின் இரண்டு வயது பெண் குழந்தைசுந்தரி  தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இந்த நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி கொண்ட குஞ்சப்பனின் மனைவி அழகம்மாள்,  மகன் கிருஷ்ணன், மகள் ஜெயா, மற்றும் அதே பகுதியை சேர்ந்த பாப்பாத்தி,  தனலட்சுமி, லிங்கசாமி ஆகியோரை வனத்துறையினர் மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக சேர்த்தனர்.  

இதில் பெண் குழந்தை சுந்தரியை அப்பகுதி மக்களும், வனத்துறையினரும் தேடிவந்தனர். இந்நிலையில்  5 நாட்களுக்கு பின் நேற்று மாலை சர்க்கார்பதியிலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர்  தூரத்தில் உள்ள பீடர் கால்வாயில் குழந்தை சுந்தரியின் உடல் மீட்கப்பட்டது.  சம்பவ இடத்திற்கு சென்ற ஆனைமலை போலீசார் சுந்தரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேட்டைகாரன்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: