மாநகராட்சி கமிஷனரிடம் திமுக எம்எல்ஏ புகார் மனு

கோவை, ஆக.14:  கோவை மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவண்குமாரிடம் கோவை சிங்காநல்லூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திக் நேற்று அளித்த புகார் மனு: கோவை மாநகரில் மக்களுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்றி தரவேண்டும். மக்களை பாதிக்கும் வகையில் அபரிமிதமாக உயர்த்தப்பட்ட சொத்து வரியை ரத்து செய்யவேண்டும். மாநகரில் பல்வேறு இடங்களில் மாநகராட்சிக்கு சொந்தமான சுடுகாடு, மயானங்கள் புதர் மண்டி கிடக்கிறது. இதை சுத்தப்படுத்த வேண்டும். மழை நீர் வடிகால்களை சீரமைக்கவேண்டும்.

சங்கனூர் ஓடை, ராஜ வாய்க்கால், நொய்யல் ஆறு போன்றவற்றை சீரமைக்கவில்லை. கனமழையால் இந்த பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிங்காநல்லூர் வெள்ளலூர் ரோட்டில் நொய்யல் பாலம் சேதமாகி விட்டது. பாலம் சீரமைக்க நெடுஞ்சாலை துறையினருடன் இணைந்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட ரோடுகளை சீரமைக்க வேண்டும். மாநகரில் எரியாத மின்விளக்குகளை சீரமைக்கவேண்டும். மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

Related Stories: