விழுப்புரம், ஆக. 14: விழுப்புரம் மாவட்டத்தில் கொலைவழக்குகளில் துப்புதுலக்கிய மோப்பநாய் ராக்கிக்கு எஸ்பி பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
விழுப்புரம் தாலுகா காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நடந்த திருநங்கை கொலைவழக்கிலும், எலவனா சூர்கோட்டை பகுதியில் நடந்த சிறுவன் கொலைவழக்கு சம்பவத்தில் துப்புதுலக்கி குற்றவாளிகளை கைதுசெய்ய உதவிபுரிந்த மோப்பநாய் ராக்கிக்கு எஸ்பி ஜெயக்குமார் தனது அலுவலகத்தில் பாராட்டி சான்றிதழை வழங்கினார்.
இதே போல் மேற்கு காவல்நிலையத்தில் பைக்திருடனை கண்டுபிடித்து 15 பைக்குகளை பறிமுதல் செய்த மேற்குகாவல்நிலைய எஸ்ஐ ஞானசேகரன் தலைமையிலான போலீசாருக்கும், செஞ்சி காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில்செயின்பறிப்பு குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்த எஸ்ஐ மருதப்பன் தலைமையிலான போலீசாருக்கும், கோட்டக்குப்பம் சோதனைச்சாவடியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்த போலீசார் அகவேல், சுந்தரமூர்த்தி, சிவசக்திமைந்தன் ஆகியோரை பாராட்டி எஸ்பி ஜெயக்குமார் வெகுமதி மற்றும் நற்சான்றிதழ்களை வழங்கினார். தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் உடனிருந்தனர்.