விழுப்புரம், ஆக. 14: விழுப்புரம் - புதுச்சேரி நான்கு வழிச்சாலை திட்டத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு மதிப்பீடு குறைத்து வழங்கியதை கண்டித்தும், விவசாய நிலங்களுக்கான மதிப்பீட்டினை உயர்த்தக்கோரி ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர். விழுப்புரத்தை அடுத்த சாலையம்பாளையம், அற்பிசம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தட்சிணாமூர்த்தி, அழகுபாண்டியன், தேசிங்கு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆட்சியர் சுப்ரமணியனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி - விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலைக்காக நிலங்கள் எடுக்கும் பணிகள் நடந்துவந்தன. அதன்படி சாலையம்பாளையம், அற்பிசம்பாளையம் ஊராட்சியில் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் இழப்பீடு வழங்கப்பட்டது. எங்களுக்கு எந்தவிதமான முன்அறிவிப்புமின்றி ஒருசதுர மீட்டருக்கு எவ்வளவு தொகை என்று அறிவிப்பு இல்லாமல் வங்கியில் பணம் செலுத்திவிட்டனர். ஆனால் எங்களுக்கு தீர்ப்பு நகல் வழங்கப்படாததால், பணம் குறைந்த தொகையாக இருந்ததால் முன்பணம் என நினைத்தோம்.