×

மாநில அரசு உரிமைகளில் மத்திய அரசு தலையிடக்கூடாது கனிமொழி எம்பி பேட்டி

கயத்தாறு,ஆக.14: மாநில உரிமைகளில் மத்திய அரசு தலையிடக்கூடாது என கனிமொழி எம்பி கூறினார். தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி, கயத்தார் மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட வெள்ளாளங்கோட்டை, தெற்கு கோனார்கோட்டை, செட்டிகுறிச்சி ஆகிய பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து கிராம மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்து அவர் பேசுகையில், ‘உங்களோடு நின்று உங்கள் குறைகளை தீர்ப்பதற்கு பணியாற்றுவேன். உள்ளாட்சித்தேர்தல் இந்தாண்டு இறுதிக்குள் வந்துவிடும். தேர்தலுக்கு பின் ஆட்சி மாற்றமும் வரும். தற்போது தங்களது கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றுவேன். விரைவில், திமுக ஆட்சிக்கு வந்த பின் உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்’ என்றார்.

பின்னர் கனிமொழி எம்பி நிருபர்களிடம் கூறுகையில், ‘மாநிலத்தின் உரிமைகளில் மத்திய அரசு தலையிடக்கூடாது. மாநில மக்களிடம் கருத்துக்களை கேட்காமல் எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. காஷ்மீரை பொறுத்தவரை, அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெறுவதை ஏற்றுக்கொள்ளக்கூடியது இல்லை என்று திமுகவின் கருத்தை தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக்கொள்கை, அதனை சார்ந்துள்ள பல திட்டங்கள் அனைத்து மாணவர்களுக்கு எதிரானது தான். மாணவர்கள் பயன்படக்கூடிய வகையில் திட்டங்களையும், எல்லா தரப்பு மாணவர்களுக்கும் கல்வி என்பது எட்டக்கூடிய சூழ்நிலையை நோக்கி செல்ல வேண்டும். சிபிஎஸ்இ கட்டணத்தை உயர்த்திக் கொண்டே போனால் அந்த கட்டணத்தை பலரும் கட்ட முடியாத நிலை தான் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். உடன் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ, மாநில விவசாய தொழிலாளர் அணிச் செயலாளர் சுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், கயத்தாறு மேற்கு ஒன்றியச்செயலாளர் கருப்பசாமி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மகாராஜன், விஜயன், ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED தருவைகுளத்தில் திருப்பயணிகள் இல்லம் திறப்பு