×

பல்லாவரம்-திருநீர்மலை சாலையில் உள்ள கால்வாயில் குப்பைகள் தேக்கம்,... வீடுகளில் மழைநீர் புகும் அபாயம்,..தூர்வாரி சீரமைக்க கோரிக்கை+

பல்லாவரம்: பல்லாவரத்தில் இருந்து திருநீர்மலை செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ள நாட்டு கால்வாயில் குவிந்துள்ள குப்பைகளால், மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல வழியின்றி குடியிருப்பு உள்ளே புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கால்வாயில் தேங்கியுள்ள அதிகப்படியான குப்பைகளால்  சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், நோய்கள் பரவும் அச்சத்தில் பகுதிவாசிகள் உள்ளனர். திருநீர்மலை ஏரியில் மழைக்காலங்களில்  சேரும் அதிகப்படியான உபரிநீர் எளிதில் வெளியேறும் வகையில் நாட்டு கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த கால்வாயானது திருநீர்மலை ஏரியில் இருந்து பம்மல் நாகல்கேணி வழியாக அடையாறு ஆற்றை சென்றடைகிறது. ஒரு காலத்தில் சிறந்த நீர்ப்பாசன கால்வாயாக திகழ்ந்த இந்த நாட்டு கால்வாய் தற்போது தற்போது குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் நாகல்கேணி பகுதியை சுற்றியுள்ள தோல் தொழிற்சாலை மற்றும் வீடு, வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுகள் இந்த நாட்டு கால்வாயில் நேரடியாக கலந்து வருகின்றன.

இதனால்  நாட்டு கால்வாய் தனது தன்மையை முழுவதும் இழந்து கழிவுநீர் கால்வாயாக மாறி வருகிறது. இதில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டு மழைக்காலங்களில் அருகில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களின் உள்ளே  மழைநீர் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது கோடை காலம் முடிந்து மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் அரசு விழித்து கொண்டு இந்த நாட்டு கால்வாயில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றவும் தூர்வாரி கரைகளை பலப்படுத்தவும் முன் வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘‘கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட கனமழை வெள்ளத்தால் பலர் உயிரிழந்தனர். பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது. மழைநீர் கால்வாய்களை அரசு முறையாக தூர்வாராததால் மழைநீர் செல்ல வழியின்றி, வெள்ளநீர் குடியிருப்பு உள்ளே புகுந்து பேரிழப்பு ஏற்பட்டதாக நீதிமன்றம் முதல் சமூக ஆர்வலர்கள் வரை பலர் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில் தற்போதும் மழைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில் அரசு விழித்துக்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் மெத்தனமாக உள்ளது. ஏற்கனவே கடந்த வெள்ளத்தின்போது பம்மல், நாகல்கேணி பகுதியெங்கும் மழைநீர் குளம்போல் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. வெள்ளம் வற்றிய பிறகும் கூட பொதுமக்கள் சிக்குன் குன்யா, டெங்கு உள்ளிட்ட கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தனர். வெள்ளம் வந்த பிறகு அரசு நடவடிக்கை எடுப்பதை விட, இதுபோன்ற கால்வாய்களில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் குப்பைகளை சுத்தப்படுத்தி மழைநீர் தங்கு தடையின்றி செல்வதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் போதிய நடவடிக்கைகள் எடுக்க முன்வர வேண்டும்.

பொதுப்பணித்துறையை தனது கைவசம் வைத்துள்ள முதலமைச்சர் இது போன்ற விஷயத்தில் தனி கவனம் செலுத்தி தமிழகத்தில் உள்ள கால்வாய்கள் குறிப்பாக சென்னையில் உள்ள நாட்டு கால்வாய் போன்ற மழைநீர் வடிகால் கால்வாயை சுத்தப்படுத்தி மீண்டும் ஒரு வெள்ளம் போன்ற துயர் சம்பவம் நடைபெறாமல் தடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்றனர்.

Tags :
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...