கஞ்சா விற்கும் தகராறில் ரவுடிக்கு வெட்டு

ஆவடி: ஆவடி அருகே கஞ்சா விற்கும் தகராறில் ஏற்பட்ட முன்விரோதத்தில் 2 பேருக்கு வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருவேற்காடு பவானி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (26). பிரபல ரவுடி. நேற்று முன்தினம் மாலை ராஜேஷ் தனது நண்பர்களுடன் ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் உள்ள காலி மைதானத்தில் அமர்ந்து மது அருந்தினார்.  அப்போது 5க்கும் மேற்பட்டவர்கள் வந்து ராஜேஷுடன் தகராறில்  ஈடுபட்டனர். பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ராஜேஷை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதை தடுத்த அவரது நண்பர் விஷாலுக்கும் வெட்டு விழுந்தது.

பலத்த காயம் அடைந்த இருவரையும்  அக்கம்பக்கத்தினர்  மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  புகாரின்பேரில் ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிராஜ் வழக்குப்பதிவு செய்தார். விசாரணையில் பருத்திப்பட்டு பகுதியில் புதிதாக அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இங்கு பணியாற்றும் வட மாநில இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வது தொடர்பான தொழில் போட்டியில் மர்ம நபர்கள் ராஜேஷையும், விஷாலையும் வெட்டியது தெரிய வந்தது.  இதனையடுத்து போலீசார் 5 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.

Related Stories: