×

மக்களவை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட 4,444 வாக்குப்பதிவு இயந்திரங்களை மகாராஷ்டிராவுக்கு அனுப்பும் பணி தீவிரம்

திருவள்ளூர், ஆக. 14: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 18ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதியும் நடந்தது. திருவள்ளூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மட்டும், அந்தந்த பகுதிகளில் உள்ள கிடங்குகளில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,  வாக்கு எண்ணிக்கை முடிந்து, 45 நாட்கள் வரை தேர்தல் தொடர்பாக யாரும் வழக்கு தொடரவில்லை. எனவே, திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்கு விபரங்களை அழித்துவிட்டு, அவற்றை மகாராஷ்டிரா மாநிலத்துக்கு அனுப்பி வைக்க தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது.

அதைத்தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், பூந்தமல்லி, பொன்னேரி, ஆவடி, கும்மிடிப்பூண்டி, மாதவரம் ஆகிய பகுதிகளில், அரசு கிடங்குகளில் வைத்திருந்த 4,444 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (கன்ட்ரோல் யூனிட்) மற்றும் 2,222 ஒப்புகை ரசீது இயந்திரங்கள் (விவிபேட்) ஆகியவை மகாராஷ்டிரா மாநிலத்துக்கு அனுப்பும் பணி இரு நாட்களாக நடந்துவருகிறது. அதையொட்டி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்கு விபரங்கள் அழிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்தது. திருவள்ளூரில் தேர்தல் பிரிவு தாசில்தார் சீனிவாசன் தலைமையில் 50 ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்புடன் லாரிகள் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மகாராஷ்டிரா மாநிலத்துக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது.

Tags :
× RELATED ரூ.97 ஆயிரம் பறிமுதல்