×

அனைத்து அதிகாரிகளும் அத்திவரதர் வைபவத்தில் பிஸி நாளை கிராம சபா கூட்டம் நடக்குமா?

திருப்போரூர். ஆக. 14: சுதந்திர தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள 12,000க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் கிராமசபா கூட்டம் நடத்த வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக நடக்கிறது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்கின்றனர். இந்த பணியில் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த்துறை உள்பட அனைத்துதுறை அதிகாரிகள், ஊழியர்களுக்கும் ஈடுபட்டுள்ளனர்.கிராமசபா கூட்டம் நடக்கும்போது, அரசு பிரதிநிதி ஒருவர் கலந்து கொண்டு, பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு பதிவு செய்வார். இந்த கருத்துக்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தெரிவித்து, பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.

தற்போது அனைத்து துறை அலுவலர்களும் அத்திவரதர் உற்சவத்தில் பங்கேற்றுள்ளதால், கிராம சபா கூட்டத்தில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களின் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கு தீர்வளிக்க முடியாத சூழல் ஏற்படும். ஆனாலும், கிராம சபா கூட்டத்தை நடத்தியே தீர வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளதால் பொதுமக்களிடம் முறையாக கணக்குகளை காட்டாமலும், அவர்களின் குறைகளை கேட்காமலும் கிராமசபா நடத்தி விட்டதாக கையெழுத்து பெறும் சூழல் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் கிராம சபாவை ஒத்தி வைத்து, அத்திவரதர் உற்சவம் முடிந்து, அனைத்து துறை அலுவலர்களும் தங்களது பணிக்கு திரும்பியதும் நடத்த வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

Tags :
× RELATED இடைத்தரகர்களால் சிதையும்...