கோயிலில் மின்சாரம் பாய்ந்து 3 பக்தர்கள் தூக்கி வீசப்பட்டனர்

கும்பகோணம், ஆக. 14: கும்பகோணம் கோயிலில் மின்சாரம் பாய்ந்து 3 பக்தர்கள் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர்.கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் தேனுபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இங்குள்ள துர்கை அம்மன் சன்னதி பிரசித்தி பெற்றதாகும். ஆடி மாதத்தையொட்டி உள்ளூர், வெளியூர், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.கடந்த 3 நாட்களாக தொடர் விடுமுறையையொட்டி நேற்று முன்தினம் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் மழையில் நனையாமல் இருக்க பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு லேசான மழை பெய்தது. அப்போது பந்தலில் மின்சாரம் பாய்ந்ததில் 3 பக்தர்கள் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் அவர்கள் காயமடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் வந்து சோதனையிட்டபோது அந்த பகுதி கடைகளுக்கு சென்ற ஒயரும், பந்தலுக்கு வந்த ஒயரும் உரசியதால் மின்சாரம் பாய்ந்தது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக பந்தல் அப்புறப்படுத்தப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: