திருத்துறைப்பூண்டி.ஆக,14: தமிழகபள்ளிகல்வித்துறை திருவாரூர் மாவட்ட நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் புதிய என்எஸ்எஸ். திட்ட அலுவலர்களுக்கான ஒரு நாள்பயிற்சி முகாம் திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.தலைமையாசிரியர் திருமாறன் தலைமை வகித்து முகாமினை துவக்கி வைத்தார். மாவட்ட என்எஸ்எஸ் தொடர்பு அலுவலர் ராஜப்பா, எடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வெங்கடேசன், உடற்கல்விஇயக்குநர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர்.என்எஸ்எஸ்சின் வரலாறு, குறிக்கோள், நோக்கம், தொடர்பணியில் செய்ய வேண்டிய பணிகள் போன்றவை குறித்து பாமணி அரசு மேல்நிலைப்பள்ளி என்எஸ்எஸ். திட்ட அலுவலர் முருகேசன், சிறப்பு முகாமில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து எடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வெங்கடேசன், பராமரிக்கப்படவேண்டிய பதிவேடுகளான சேர்க்கை பதிவேடு, நிகழ்ச்சி பதிவேடு, வருகை பதிவேடு, பார்வையாளர் பதிவேடு, ஆலோசனை குழு கூட்டபதிவேடு, இருப்பு பதிவேடு போன்றவை குறித்து திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்எஸ்எஸ்திட்ட அலுவலர் சக்கரபாணி, தணிக்கை அறிக்கைகள், மாவட்ட மாநில தேசிய அளவில் வழங்கப்படும் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் குறித்து மாவட்ட என்எஸ்எஸ். தொடர்பு அலுவலர் ராஜப்பா ஆகியோர் பயிற்சி அளித்தனர்.இதில் இடும்பாவனம் அரசு மேல்நிலைப்பள்ளிதிட்ட அலுவலர் ஞானசேகரன், நீடாமங்கலம் மேல்நிலைப்பள்ளிதிட்ட அலுவலர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அனைவருக்கும் திருக்குறள் புத்தகம் மற்றும் மரக்கன்றுகள் திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில் தலைமையாசிரியர் திருமாறன் வழங்கினார்.