காலி பணியிடங்களை நிரப்ப அரசு ஊழியர்கள் வலியுறுத்தல்

தாராபுரம். ஆக.11: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 4வது மாவட்ட மாநாடு மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட இணைச்செயலாளர்கள் ராணி, தங்கவேல், வட்டக்கிளை தலைவர் ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் சுப்ரமணி சிறப்புரையாற்றினார்.    முன்னதாக தாராபுரம் அமராவதி சிலை அருகில் இருந்து அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை முழக்கத்துடன் பேரணியாக புறப்பட்டு தாராபுரம் தாலுகா அலுவலக வளாகத்தை அடைந்தனர் அங்கு நடைபெற்ற மாவட்ட மாநாட்டில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது தமிழக அரசால் கைது செய்யப்பட்டு சிறை சென்ற அரசு ஊழியர்களுக்கு அவர்களின் தியாகச் செயலை பாராட்டி கேடயமும், பதக்கங்களும் வழங்கப்பட்டன. அரசு பணியிடங்களை நிரப்பி தமிழகத்தில் படித்து முடித்து வேலைவாய்ப்புத் துறையில் பதிவு செய்துள்ள 80 லட்சம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் முயற்சியை அரசு கைவிட்டு அரசாணை 56ஐ அமல்படுத்தி அரசுத்துறையில் பணியிடங்களை நீக்கிவிட முயற்சி மேற்கொண்டு வரும் அரசின் செயலை இம்மாநாடு கண்டிக்கிறது. காலிப்பணியிடங்களை முறையாக நிரப்பி காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் செய்திட வேண்டும். ஜாக்டோ ஜியோவினர் நடத்திய போராட்டங்களில் முன்னின்று பங்கேற்ற வர்கள் மீது அரசு எப்ஐஆர் பதிவு செய்வது, பணி ஓய்வு பெறும் நேரத்தில் அவர்களை பணி நீக்கம் செய்து பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: