ஈரோடு, ஆக. 11: ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் அறுவடை செய்யும் கரும்புகளை ஆலை உரிமையாளர்களுக்கு டன் கணக்கில் கொள்முதல் செய்து, அதனை பாவாக்கி அச்சு மற்றும் உருண்டை வெல்லம், நாட்டு சர்க்கரை தயாரிக்கின்றனர். ஈரோடு, முள்ளாம்பரப்பு, கோபி, கவுந்தப்பாடி, அம்மாபேட்டை ஆகிய பகுதியில் கரும்பாலைகள் அதிகளவில் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் அச்சு, உருண்டை வெல்லம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்து செல்வது வழக்கம். இதில் ஆலை உரிமையாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்யப்படும் அச்சு-உருண்டை வெல்லம், நாட்டு சர்க்கரைகளை 30 கிலோ மூட்டைகளாக ஈரோடு அடுத்த சித்தோடு வெல்ல மண்டிக்கு சனிக்கிழமை தோறும் ஏலம் மூலம் விற்பனை செய்வர். இந்த மண்டிக்கு வரத்தாகும் அச்சுவெல்லத்தை 90சதவீதம் கேரளா மாநில வியாபாரிகள் வாங்கி செல்வது வழக்கம். ஆனால் கேரளா மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கன மழை பெய்து வருவதால், கடந்த 2 வாரமாக அந்த மாநில வியாபாரிகள் வருகை முற்றிலும் குறைந்தது. இதனால் அச்சுவெல்லம் மூட்டைகள் பல ஆயிரக்கணக்கில் தேங்கியிருப்பதால் உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.