ஈரோடு, ஆக. 11: ஈரோட்டில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு கிளை மாநாடு நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு அமைப்பின் தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். செயலாளர் ஜோதிமணி, சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். 1-12-2019க்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும்.
கணக்கீட்டு பிரிவு, கணக்கு பிரிவு, நிர்வாக பிரிவில் வேலைப்பளு அதிகம் உள்ளதால், அதற்கு ஏற்ற அளவில் பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். பணி செய்பவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். மின்வாரியத்தில் காலியாக உள்ள 50ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும் கேங்மேன் பெயர் மாற்றி ஐ.டி.ஐ., படித்தவர்களையும், ஒப்பந்த ஊழியர்களையும் நேரடியாக கள உதவியாளர்களாக நியமிக்க வேண்டும். பகுதி நேர ஊழியர்களுக்கான பணி நிரந்தர உத்தரவை பெற வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் துணை தலைவர் சண்முகம், பொருளாளர் விஸ்வநாதன், நகர செயலாளர் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.