×

லால்குடி அருகே தலித் கிறிஸ்தவர்களை எஸ்சி பட்டியலில் சேர்க்க வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி போராட்டம்

லால்குடி, ஆக.11: லால்குடி அருகே தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.லால்குடி அருகே கொன்னைக்குடி கிராமத்தில் இந்திரா காலனி தெருவில் தலித் கிறிஸ்தவர்கள் ஆகஸ்ட் 10ம் தினத்தை ஆண்டுதோறும் கறுப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர். மத அடிப்படையில் வேற்றுமை காட்டும் ஜனாதிபதி ஆணை 1950ன் பத்தி 3ன் அடிப்படையில் கடந்த 69 ஆண்டுகளாக தலித் கிறிஸ்தவர்களுக்கும், தலித் இஸ்லாமியர்களுக்கும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் உரிமைகள் மறுக்கப்படுவதால் தலித் கிறிஸ்தவர்களும், தலித் இஸ்லாமியர்களும் அரசு வேலைவாய்ப்பிலும், தாழ்த்தப்பட்டோருக்கு அளிக்கும் சலுகைகளிலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த 2005 ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையை அமல்படுத்தாமல் உள்ளதையும், உச்சநீதிமன்றத்தில் 2004 முதல் நடைபெறும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரும் வழக்கினை முடிவுக்கு கொண்டுவராமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசை கண்டித்தும், ஆகஸ்ட் 10ம் தினமான நேற்று கறுப்பு தினமாக அனுசரித்து கொன்னைக்குடி கிராமத்தை சேர்ந்த இந்திரா காலனி வீடுகள் முழுவதும் கறுப்புக் கொடி கட்டியும், கறுப்புக் கொடி ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கிராம முக்கியஸ்தர் மரியகமல் தலைமை வகித்தார். கிராம பொறுப்பாளர் பவுல்தாஸ், பெர்ணான்டஸ், ராஜா, பதுவுராஜ், ஜான்பீட்டர், ராயப்பன், சகாயம், சேவியர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கொன்னைக்குடி கிராமத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திருச்சி: மத்திய அரசு தலித் கிறிஸ்தவர்களை எஸ்சி பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி திருச்சி மறைமாவட்ட எஸ்சி, எஸ்டி பணிக்குழு மற்றும் தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கம் சேர்ந்து திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மறை மாவட்ட எஸ்சி. எஸ்டி பணிக்குழு செயலாளர் அந்துவான் தலைமை வகித்தார். புத்தூர் மறை மாவட்ட அதிபர் மைக்கில்ஜோ, பொன்மலை மறை மாவட்ட அதிபர் சகாயஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் கறுப்புக்கொடியேந்தி கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.


Tags :
× RELATED நவல்பட்டு வாக்குசாவடியில் வாக்கு...