×

மூதாட்டியிடம் நூதன முறையில் வங்கி பணம் அபேஸ்

வைகுண்டம், ஆக. 11: மூதாட்டியிடம் வங்கி பணத்தை மர்மநபர் நூதனமாக அபேஸ் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 இதுகுறித்து வைகுண்டம் அடுத்த பொன்னன்குறிச்சி தெற்குத் தெருவை சேர்ந்த காசி மனைவி ஆறுமுகத்தாய், தூத்துக்குடி எஸ்பியிடம் புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:  எழுத படிக்கத் தெரியாத நான் மிகவும்  கஷ்டப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவள். எனக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.  எனது மகளுக்கு திருமணமாகி விட்டது. கோவையில் கூலி வேலை பார்த்து வரும் எனது மகனின் திருமணத்திற்காக வைகுண்டத்தில் செயல்படும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் கணக்கு  துவங்கி எனது மகன் மாதம்தோறும் அனுப்பிய தொகையை சேமித்து வந்தேன்.  அந்த வகையில் வங்கிக் கணக்கில் ரூ.70 ஆயிரம் வரை சேமித்து வைத்திருந்த நிலையில், கடந்த பொங்கல் பண்டிகையின்போது மகளுக்கு பொங்கல்படி   கொடுப்பதற்காக வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்கச் சென்றேன். இதற்காக ஏடிஎம் மையத்தில் எனது ஏடிஎம் கார்டை செலுத்தியபோது பணம் இல்லை என வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நான், வங்கிக்கிளையில் சென்று கேட்டபோது எனது வங்கிக் கணக்கை மர்மநபர் மோசடியாக பயன்படுத்தி, ஆன்லைன்  மூலமாக பொருட்கள் வாங்கி அபேஸ் செய்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வைகுண்டம் போலீசிலும், பின்னர் தூத்துக்குடி மாவட்ட  குற்றப்பிரிவிலும் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. வங்கியில்  நான் பெற்ற ஸ்டேட்மென்டை பார்க்கும்போது மர்மநபர் ஒருவர் ஆன்லைன் மூலமாக எனது வங்கிக்கணக்கை பயன்படுத்தி இதுவரை 65 பொருட்கள் வாங்கியுள்ளது தெரியவருகிறது.  எனவே, இதுவிஷயத்தில் கவனம் செலுத்தி  உண்மை  குற்றவாளியை துரிதமாக கைது செய்து எனது பணத்தை மீட்டுத்தர வேண்டுகிறேன் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
× RELATED புத்தன்தருவை கூட்டுறவு சங்கத்தின் வளர்ச்சி நிதி வழங்கல்