மேச்சேரி, ஆக.11: நங்கவள்ளி அருகே தாசகாப்பட்டியை சேர்ந்த கம்யூனிஸ்ட் பிரமுகர் வேலு தங்கமணி(34). அதே பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். கடந்த மாதம், சமட்டியூர் பகுதியை சேர்ந்த சதீஷ், மணி இருவரும் சேர்ந்து கொடூரமான முறையில், தங்கமணியை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். அவரது உடலை அடக்கம் செய்ய ஊர்வலமாக எடுத்து சென்ற போது, குற்றவாளியான சதீஷ் வீட்டின் மீது, மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சேதப்படுத்தினர். இது தொடர்பாக நங்வள்ளி கிராம நிர்வாக அலுவலர் மைதிலி கொடுத்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த நங்கவள்ளி போலீசார் மணிகண்டன்(27), அருண்குமார்(21) ஆகிய 2பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருப்பவர்களை வலை வீசி தேடி வந்தனர். இந்நிலையில், பெரியசொரகை பகுதியை சேர்ந்த நரேந்திரன், ரமேஷ், தமிழ்ச்செல்வன், முருகன் ஆகிய 4பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.