புதுச்சேரி, ஆக. 8: நாடு முழுவதும் சுதந்திர தினம் வருகிற 15ம்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. காஷ்மீர் மாநிலம் 2ஆக பிரிக்கப்பட்ட சம்பவத்தால் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது. புதுவையில் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. இதற்கான பந்தல் அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அங்கு காவல்துறை, என்சிசி, பள்ளி- கல்லூரி மாணவர்கள் தீவிர அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சுதந்திர தினவிழா கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மாணவ- மாணவிகளும் நடன ஒத்திகை மேற்கொண்டு வருகின்றனர். ஆக. 11ம்தேதிக்கு பிறகு இம்மைதானம் முழுமையாக போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது. வருகிற 13ம்தேதி புதிய டிஜிபி பாலாஜி ஸ்ரீவஸ்தவா தலைமையில் இறுதி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.