புதுச்சேரி, ஆக. 8: தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்டம் சார்பில் சூரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு எதிர்ப்பு மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மருத்துவ அதிகாரி (பொறுப்பு) மேனகா தலைமை தாங்கினார். சித்தா டாக்டர் தர் முன்னிலை வகித்தார். சுகாதார உதவியாளர் கிருஷ்ணகுமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மலேரியா திட்ட உதவி இயக்குனர் டாக்டர் கணேசன் கலந்து கொண்டு டெங்கு பரவும் முறை, நோய்க்கான அறிகுறிகள், தடுப்பு முறைகள், மருத்துவ உதவிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். கொசுக்கள் உற்பத்தியாகும் நீர்த்தேக்கங்களை அப்புறப்படுத்துவதின் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்தினார். நிகழ்ச்சியில் ஊர்மக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் செய்திருந்தனர்.