கூட்டுறவு நூற்பாலை மரங்களில் தேங்காய் பறிக்க எதிர்ப்பு

திருபுவனை, ஆக. 8:   திருபுவனையில் கூட்டுறவு நூற்பாலை மரங்களில் தேங்காய் பறிக்க எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர் குடும்பத்தினர் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். திருபுவனை கூட்டுறவு நூற்பாலைக்கு சொந்தமான பாரதிநகரில் நூற்பாலை தொழிலாளர்கள் 20 பேர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இங்கு ஒரு குடும்ப அட்டைக்கு 5 தென்னங்கன்றுகள் வீதம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டது. அதனை தொழிலாளர்கள் பராமரித்து வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் அந்த தென்னை மரங்களில் தேங்காய் மற்றும் இளநீர் பறிப்பதற்காக கூட்டுறவு நூற்பாலை மூலம் ஏலம் விடப்பட்டது. இதில் ஏலம் எடுத்தவர் இளநீர் மற்றும் தேங்காய் பறிப்பதற்காக நேற்று காலை பாரதிநகருக்கு சென்றபோது அவரை தொழிலாளர்கள் குடும்பத்தினர் வழிமறித்து இந்த தென்னை மரங்களை நாங்கள் தான் பராமரித்து வருகிறோம். இதில் உள்ள தேங்காய், இளநீர் போன்றவையும் எங்களுக்குத்தான் சொந்தமானது என்று கூறி தடுத்தனர். பின்னர் அனைவரும் கூட்டுறவு நூற்பாலை முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: