வரும் 15ம் தேதி சுதந்திர தினத்தையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் உத்தரவு

வேலூர்: சுதந்திர தினத்தையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபா கூட்டம் நடத்த வேண்டும் என்று ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் பாஸ்கரன் சென்னை தவிர்த்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: சுதந்திர தினமான வரும் 15ம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். இதில் அனைத்து பிரிவு கிராம மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு திட்டங்கள் மற்றும் அரசு செயல்பாடுகள் குறித்து கூட்டப்பொருள் விவாதிக்கப்பட வேண்டும்.

கிராம ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி வரும் 15ம் தேதி காலை 11 மணியளவில் இந்த கூட்டத்தை நடத்த வேண்டும். தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், அனைத்து கிராம மக்களும் ஆர்வத்துடன் கலந்து கொள்ளும் வகையில் கூட்டம் நடக்கும் இடம் மற்றும் நேரத்தை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். எனவே, ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நல்ல முறையில் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கூட்டம் தொடர்பாக வரும் 29ம் தேதிக்குள் அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும். இதில், கடந்தாண்டுகளில் பருவமழை வழக்கத்தை விட குறைவாக பெய்ததால், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. இதனால் விநியோகிக்கப்படும் குடிநீர் அளவும் குறைந்துள்ளது.

எனவே, நீர்சிக்கன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதித்தல், ஊராட்சி பகுதிகளில் நடந்து வரும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விவரங்கள் குறித்தும், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் குறித்தும், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், உணவு பொருட்கள் வழங்குதல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு உட்பட பல்வேறு பணிகள் குறித்தும் விவாதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: