முத்துப்பேட்டை, ஜூலை24: முத்துப்பேட்டை அடுத்த எடையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுபகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்கள் கல்வியிலும், பல்வேறு போட்டிகளிலும் அதிக சதவிகிதத்தில் தொடர்ச்சியாக தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் நடத்த திட்டமிட்டப்பட்டது. இந்நிலையில் நேற்று ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைக்கு கணினி உள்பட பல்வேறு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிவசாமி தலைமையில் நடைபெற்றது. தலைமையாசிரியர் வெங்கடேசன் முன்னிலை வகித்து வரவேற்று பேசினார். இதில் ரூ. 1லட்சம் மதிப்புள்ள கணினி, புரசெக்டர், இன்வெட்டர் உள்பட பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர்கள், ஆசிரியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.