கத்திக்குத்தில் படுகாயமடைந்த ரயில்வே போலீஸ்காரர் சிகிச்சை பலனின்றி சாவு

மண்ணச்சநல்லூர், ஜூலை 24: மண்ணச்சநல்லூர் அருகே சந்து பிரச்னையில் பக்கத்து வீட்டுக்காரரால் சரமாரியாக கத்திக்குத்துப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரயில்வே போலீஸ்காரர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.மண்ணச்சநல்லூர் அருகே உளுந்தங்குடி பாலையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ரெங்கராஜ்(55). ரயில்வே போலீசாக பணிபுரிந்து வந்தார். இவரது வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் கோவேந்திரன்(35). இருவரது வீட்டிற்கும் இடையே ஒரு சந்து உள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 20ம் தேதி இருவருக்கும் இடையே இதுபற்றி மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கோவேந்திரன் கத்தியால் ரெங்கராஜை சரமாரியாக குத்திவிட்டார். இதில் படுகாயமடைந்த ரெங்கராஜுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ரெங்கராஜ் நேற்றிரவு இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கோவேந்திரனை கைது செய்தனர்.

Related Stories: