முழு மானியத்துடன் தீவனப்பயிர் வளர்ப்பு விவசாயிகள் பயன்பெற அழைப்பு

திருச்சி, ஜூலை 24: திருச்சி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் அரசு மானியத்துடன் கூடிய தீவனப்பயிர் வளர்ப்பு திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு உயர்ரக கலப்பின கம்பு, நேப்பியர், தீவனச்சோளம், தீவன மக்காச்சோளம், தீவன தட்டைப்பயறு, வேலி மசால் மற்றும் சூபாபுல் போன்ற தீவனப்பயிர்கள் 100 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ள விவசாயிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.அரசு மானியத்துடன் கூடிய தீவனப் பயிர் வளர்ப்பு திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்போர் பசுந்தீவனம் உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த 7 ஆண்டுகளாக மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், இறவையில் 200 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்திட பல்லாண்டு உயர் ரக கலப்பின கம்பு நேப்பயிர், தீவனச்சோளம், தீவன மக்காச்சோளம், தீவன தட்டைப்பயிறு, வேலிமசால் மற்றும் சூபாபுல் போன்ற தீவனப்பயிர்களை 100 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது.மானாவாரியில் 1,200 ஏக்கரில் 100 சதவீத மானியத்தில் தீவனச் சோளம் மற்றும் தீவன தட்டைபயிறு சாகுபடி செய்திட தீவன விதைகள் வழங்கப்படவுள்ளது. இந்த திட்டங்களில் பயன்பெற ஏற்கனவே இந்த திட்டங்களில் பயன்பெற்றிருத்தல் கூடாது. அனைத்து திட்டங்களிலும் 30 சதவீதம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தேர்வு செய்யப்படுவர். சிறு மற்றும் குறு விவசாயிகள், தமிழக அரசின் விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டத்தில் பயன் பெற்றவர்கள் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள் தங்கள் பகுதியிலுள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர்களை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Related Stories: