இசைக்கலையை ஊக்குவிக்க மாநகராட்சி பள்ளிகளில் இசை பயிற்சி வகுப்பு ஆணையர் புது முயற்சி

திருச்சி, ஜூலை 24: திருச்சி மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச இசை பயிற்சி வகுப்பு ஆணையர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

திருச்சி மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளிடையே இசை ஆர்வம் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இலவச இசை பயிற்சி வகுப்பு துவக்க விழா எடமலைப்பட்டிபுதூர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளில் நடந்தது. இதில் ஆணையர் ரவிச்சந்திரன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தரமான கல்வியுடன், கூடுதல் திறன்களை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உடல் ஆரோக்கியத்தை காக்கும் வகையில் யோகா பயிற்சி, உடல் நலன் காக்க பேரிச்சம்பழம் மற்றும் ஆங்கில வாசிப்புதிறன் வளர்க்கும் வகையில் ஆங்கில வாசிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் திருச்சி மாநகராட்சியுடன் இணைந்து கலைக்காவிரி நுண் கலைக்கல்லூரியும் புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வாரம் ஒரு நாள் 2 மணி நேரம் வரை இசை பயிற்சி அளிக்கப்படும். இந்த வகுப்பில் கலைக்காவிரி இசை ஆசிரியர்களால், அடிப்படை இசை பயிற்சி, வாய்ப்பாட்டு, கீ போர்டு உள்ளிட்ட இசைக்கருவிகள் வாசித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும். இதற்கான இசைக்கருவிகள் மாநகராட்சி சார்பில் வழங்கப்படும். 32 மாநகராட்சி பள்ளிகளில் இலவச இசை பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது என தெரிவித்தார். இதில் உதவி ஆணையர் பிரபாகரன், மணிகண்டம் வட்டார வளச்சி அலுவலர் மருதநாயகம், பள்ளி தலைமை ஆசிரியர்கள், கலைக்காவிரி நுண் கலைக்கல்லூரி முதல்வர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Stories: